புறநானூறு 154 : மோசிகீரனார் - அரிதும் ; எளிதும்
அலை மிகுந்த கடற்கரை வழியாகவே அடிக்கடி சென்றாலும் தெரிந்தவர்களைக் கண்டால் தாகம் தீர்க்கச் சிறிது நன்னீர் கேட்பார்கள் மனிதர்கள். அதைப்போலவே அரசர்களின் அருகிலிருக்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் எக்குறையுமற்ற வள்ளல்களிடமே செல்வார்கள் புலவர்கள்.
ஆகவே ஊதியமோ பயனோ கருதாது என் உள்ளத்திற்கு உற்றவன் என்றெண்ணி உன்னை விரும்பிப் பார்க்க வந்துள்ளேன். நீயாகத் தந்தாலும் தராவிட்டாலும் 'எனக்குத் தா' என்று நான் பரிசில் கேட்பது அரிது. தோல்வியே கண்டிராத போர்ப்படையையும் கண்டு அஞ்சாத உன் வீரத்தையும் , துணியால் கட்டிய தூரி (ஊஞ்சல்) போல விரிந்து உச்சந்தலையில் கொட்டும் குளிர்ச்சி மிக்க நன்னீர் அருவியை உடைய உனது பெருங்காட்டையும் பற்றிப் பாடுவதும் எனக்கு எளிது.
புறநானூறு 154
திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழைய ராகவும் புரைதபு
வள்ளியோர் படர்குவர் புலவர் அதனால்
யானும் பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென இரத்தலோ அரிதே நீஅது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்எனக்கு எளிதே
Comments