திருக்குறள் அதிகாரம்: 115 காமத்துப்பால் : களவியல் : அலரறிவுறுத்தல்

அலரறிவுறுத்தல் : 

முதிர்வில்லாத் துறவாகிய #மடலூர்தல் கொண்டு திரியும் இளைஞன், தான் விரும்பிய பெண்ணின் வீடிருக்கும் தெருவிலே சுற்றிச் சுற்றி வருவான். அவ்வாறு அவன் செல்லும் பொழுது அக்கம்பக்கத்தினர் அவனையும் அப்பெண்ணையும் இணைத்துப் பேசி இளமையும் அழகுமுடையவனின் துறவறத்துக்குக் காரணம் அப்பெண் எனப் பழித்துப் பேசுவர்.

 

#அய்யன் 1141

/ அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால் /

மடலூரியதற்கான காரணம் பற்றி வதந்தி எழ என்னுயிர் காத்திருக்கும். ஆனால் என் பாக்கியம் ஊரில் உள்ள பலர் அதனை அறியவில்லை. 


#அய்யன் 1142

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

மலர் போன்ற கண்கள் உடையவளோடு மடலூரிய என்னை இணைத்துப் பேசுகின்றது இவ்வூர். அவளது அருமையை அறியாமல் அவள் எனக்குக் கிட்ட வழிசெய்கின்றனர்.


#அய்யன் 1143

/ உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து /

நடந்துவிடாதோ ... ஊர் முழுவதும் பரவிய வதந்தியால் வரும் நன்மை. பெறாத பொருளைப்  பெற்றதுபோல இன்பம் தந்து நீர்த்துப்போனது வதந்தி. 


#அய்யன் 1144

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

வதந்தியால் கிடைப்பது மடலூரியோருக்கான காதலும் காமமும் மட்டுமே.அதுவும் இல்லையென்றால் வதந்தி அதன் சிறப்புத் தன்மையை இழந்துவிடும் .


#அய்யன் 1145

/ களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது /

உண்டால் மட்டுமே அடங்கும் கள்ளுண்ணும் ஆசையைப் போலத் தணியாத காதல் வதந்தியாக வெளிப்படும் ஒவ்வொரு முறையும் மடலூரியவனுக்கு இன்பம் தரும்


#அய்யன் 1146

/ கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று /

கண்ணால் காண்பது ஒரு நாள் மட்டுமே செய்தியாக நிலைத்திருக்கும்.எங்களைப் பற்றிய வதந்தியோ நிலவைப் பாம்பு விழுங்கியது என்ற செய்தி போல நிலைத்துவிடும்.


#அய்யன் 1147

/ ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய் /

ஊரார் பேசும் வதந்தியை உரமாகவும் அன்னையின் கண்டிப்பை நீராகவும் கொண்டு நீண்டு வளரும் என்னவளின் காதல் நோய் என்னும் செடி.


#அய்யன் 1148

/ நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல் /

நெய்யைக் கொண்டு தீயை அணைப்போம் என்பதைப் போன்றது பொய்ப் பழி சொல்லி எங்கள் காதலைப் பிரிப்போம் என்பது.


#அய்யன் 1149

/ அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை /

' வதந்தியால் உனக்கு வரும் பழிச்சொல் அஞ்சி என்னோடு சேர்வதோ தாழ்வு , புகழைக்  காத்துக்கொள் ' என்றார் பலர் சிரிக்கும்படி தன் வெட்கத்தைத் துறந்து எனக்காக மடலூரிய பின்பு.


#அய்யன் 1150

/ தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர் /

எங்களைச் சேர்த்து வைக்கும் என்று நான் எதிர்நோக்கும் வதந்தியைப் பரப்பும் இவ்வூர் மக்கள் வேண்டுவதைத் தருவார் என் அன்பு காதலர்.

Comments