திருக்குறள் அதிகாரம்: 112 காமத்துப்பால் : களவியல் : நலம்புனைந்துரைத்தல்

நலம்புனைந்துரைத்தல்  : 

நல்லது கெட்டது எடுத்துரைத்துப் புரிய வைப்பது நலம்புனைந்துரைத்தல் .  தன் காதலியின் அழகோடு ஒப்பிட்டு இயற்கைக்கும் மற்ற பெண்களுக்கும் நல்லது கெட்டது எடுத்துரைக்கும் பாக்கள்.

 

#அய்யன் 1111

/ நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள் /

நன்னீரில் வாழும் மென்மையான அனிச்ச மலரே ! உன்னைவிட மென்மையான குணமுடையவளிடத்தில் நான் காதலில் வீழ்ந்துவிட்டேன். நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

 

#அய்யன் 1112

/ மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று /

மலர்களைக் கண்டால் நெஞ்சம் இயலாமையால் துன்பப்படும் ! அவளோ பலர் பார்க்கும் பூப்போன்றவள் என்று. மலர்களைப் பார்க்காதிருத்தல் நலம்.

 

#அய்யன் 1113

/ முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு /

மென்மையான மேனி, முத்துப் போன்ற அழகு பற்கள், போதை தரும் நறுமணம், வேல் போல் திரண்ட இமையுடைய கண்கள் .. இவையனைத்தும் சேர்ந்து தரும் இன்பத்திற்கு இணையானது, மூங்கில் போன்ற அவளது தோள்களில் சாய்தல்.

 

#அய்யன் 1114

/ காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று /

உயர்குணத்தையே ஆடையாக உடுத்தியவளின் கண்களுக்கு ஈடாகமாட்டோம் என்று குவளை மலர்களே தலை கவிழ்ந்து நிற்கும். எனவே மற்ற பெண்கள் சற்று ஒதுங்கிவிடுங்கள்.

 

#அய்யன் 1115

/ அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை / 


மென்மையான அனிச்சப் பூவினைத் தாங்கும் காம்பு போன்ற கால்களை உடையவள் , தன் இடையில் அணிந்திருக்கின்றாள் நல்ல கனமான ஆடை மற்றும் நகையை. தாங்கமாட்டாள் ..உடைந்து விடுவாள் என்று எடுத்துச்சொல்ல வேண்டுமே

 

#அய்யன் 1116

/ மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் /

இரவில் குழம்பித்தான் போயின விண்மீன்கள், நிலவையும் அவள் முகத்தையும் வேறுபடுத்த முடியாமல். வேறு வழியில்லை, பகலில் வாருங்கள்.

 

#அய்யன் 1117

/ அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து /

தேய்பிறை முடிந்து ஒளிரும் முழுமதிக்கும் உண்டோ அழகு , மாதந்தோறும் புதுப்பொலிவடையும் மாதர் முகம் போல. பாவம் நிலவு.

 

#அய்யன் 1118

/ மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி /

மாதர் முகம் போல விரைவாக ஒளிர முடியாவிட்டால், நீயும் காதலித்துப் பார் நிலவே

 

#அய்யன் 1119

/ மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி /

மலர் போன்ற கண்களை உடையவளின் அழகு முகத்தோடு ஒத்துப்போனால் பலர்காணும்படி வெளியில் வருவது சரி.  எனவே ..... புரிந்து நடந்துகொள் நிலவே.

 

#அய்யன் 1120

/ அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் /

மென்மையான அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் பெண்களின் காலடிக்கு முன் நெருஞ்சி முள். முத்தத்தில் உணர்ந்தேன். இனி அவை எனக்கு வேண்டாம்.

 

 

Comments