மடலூர்தல் , மடலேறுதல் என்றால் என்ன?

குறுந்தொகை 182 ( - மாதங்கீரனார் )

===============

// விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்

மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி

வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி

ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்

தெருவின் இயலவும் தருவது கொல்லோ

கலிந்தவிர் அசைநடைப் பேதை

மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே //

உயர்ந்த பனைமரத்தில் விளைந்த சிறந்த பனை மட்டையில் செய்த நல்ல அணிகலனைப் பெரிய மாலையில் தொடர்ச்சியாகக் கோர்த்து, வெள்ளை எலும்புகளோடு சேர்த்துச் சூடி , பிறர் எள்ளத் தோன்றி , ஒரு கயிற்றின் வழியில் நிற்கும் கோவணத்தைக் கட்டி , வெட்கத்தை விட்டுத் தெருவில் அவரவரால் முடிந்ததைத் தருவதைப் பெறவா துறவு கொண்டேன் ? என் நிலைகண்டு வருந்தி அவள் மெலியவில்லை. மிகுதியான பொலிவும் மென்மையான நடையயையும் கொண்டுள்ளாள். இது அவளுக்கு என்பாற் விருப்பமில்லை என்பதை உணர்த்தும் செய்தியே. இப்போலித் துறவும் வேண்டாம் இவளும் வேண்டாம் ....

குறுந்தொகை 173 - (மதுரைக் காஞ்சிப்புலவன் / மாங்குடி கிழார் / மாங்குடி மருதனார் )

==============

// பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த

பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்

பூண்மணி கறங்க வேறி நாணட்

டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப

இன்னள் செய்த திதுவென முன்னின்

றவள் பழி நுவலு மிவ்வூர்

ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா றுளெனே. //

பொன் போன்ற மஞ்சள் நிறப் புது ஆவாரம் பூக்களைக் கொண்டு, பல நூல் கோர்த்துச் செய்த பூமாலையில், பனைமட்டையோடு சேர்த்துச் செய்த வலிமையான பெரிய மணிகள் பூட்டிய அணிகலனை, ஒலியெழச் சூடி , வெட்கத்தைத் துறந்து , அழிவு தரத் திரண்ட என் காமநோய் தொடர்ந்து பெருக நிற்பேன். அவள்தான் காரணம் என்று இவ்வூர் பழிக்கும். அவ் இழிச்சொல் அஞ்சி அவள் என் காதல் ஏற்பாள் என்றுணர்ந்து இங்கு வந்துள்ளேன்.

' மடலூர்தல் ' ' மடலேறுதல் ' : திருக்குறள் 1131

/ காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடல்அல்லது இல்லை வலி /

தீராக் காமத்தில் மூழ்கி வருந்துபவருக்கு அரண் துறவறமாகும். உண்மையாக விலக்க நினைப்போருக்கு அதைவிட வலிமையான துணை வேறொன்றுமில்லை

தன் காதலைத் தான் விரும்பிய பெண் ஏற்காவிட்டால், இளைஞர்கள் காமநோய் தாங்காது துறவு மேற்கொள்வர். இதற்குப் பெயர் 'மடலூர்தல்'. தன் மீதிருந்த அன்பின் காரணமாக அழகும் இளமையும் உடையவன் துறவியாக அலைவது கண்டு காணச் சகிக்காது, அவன் மீது காதல் கொள்வாள் தலைவி.

பின்னர்ப் பெரியவர்கள் சபையில் வைத்துப் பேசி இளைஞனின் துறவை விலக்கச் செய்து பெண்ணை மணமுடித்துத் தருவர். வேண்டுமென்றே துறவு மேற்கொண்டு ஊராரால் எள்ளி நகையாடப் படும் 'மடலூர்தல்', கடைசிவரை காதல் வராத பெண்டீர் வீட்டுத் தெருவிலே சுற்றித் திரிந்த 'மடலூர்தல்', வீம்பிற்குப் போலியான துறவு மேற்கொண்டு காமம் தாங்காத இளைஞர்களின் 'மடலூர்தல்' போன்ற நிகழ்வுகளும் உண்டு.

நாற்பது ஐம்பது வருடம் முன்பு வரை 'அவளைக் கட்டிவை, இல்லைன்னா சாமியாராப் போறேன்'போன்ற சொற்கள் வீடுகளில் இருந்தது.

* பனைமரத்தால் செய்யப்பட்ட குதிரையில் ஏறித் திருமணத்திற்குச் சம்மதம் தராத , தான் காதலித்தப் பெண்ணின் ஓவியத்தைக் கையில் ஏந்தித் தெருவில் செல்லும் இளைஞனைக் கண்டு, பெண்ணும் பெண்வீட்டாரும் இழிச்சொல் அஞ்சி பெண்ணை அவனுக்கே மணமுடித்துத் தருவர். இது மடலூர்தல் என்பாரும் உளர்.

Comments