Posts

Showing posts from April, 2021

நாலடியார் 120 :

ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான்.

குறுந்தொகை 399 : பரணர்

ஊருக்கு நீர்வழங்கும் குளத்தின் மேற்பரப்பில் போர்த்தியிருக்கும் பாசி போன்றது 'பசலை' என்னும் இக்காதல் நோய். காதலன் தொடும்பொழுதெல்லாம் நீங்கி, அவர் என்னை விட்டு விலகிச் செல்லும் போதெல்லாம் மீண்டும் பரவுகின்றதே ....

நற்றிணை 217 : கபிலர்

புகழ் பெற்று வாழ்பவரின் செல்வத்தைப் போலக் காணுமிடத்திலெல்லாம் ஒளிரும் யானை, கருமையான வலிய புலியென அஞ்சி அருகிலுள்ள கரும் பால் வடியும் வேங்கை மரத்தில் விரைவாய் முட்டிமோதி மயங்கித் தன் சினம் தணிக்கும். நம் மலையரசன் மிக இனிமையானவன் தான் என்றாலும் அவன் அச்சப்படும் வகையில் பொய்க்கோபம் கொண்டு ஊடல் கொள்வேன் தோழி.

குறுந்தொகை 42 : கபிலர்

நடுசாமத்தில் தோன்றிப் பொழியும் மாமழையானது அருவியாய்ப் பாய்ந்து விலகும் மலைகளை உடைய அரசே, இரவினில் உன் காமம் தீர்ந்ததும் நீயும் விலக்கிவிடுவாயோ .. 

நாலடியார் 393 :

உழவர்கள் தங்கள் கருவிகளை ஒதுக்கி வைக்கும்படி மயக்கம் தரும் இம்மாலை வேளையில் மலர்களைக் கொய்து மாலை கோர்த்தவள், துணை இல்லாதவர்க்கு இம்மாலைப் பொழுது என்ன செய்துவிடுமென்று எண்ணிக் கையிலிருக்கும் மாலையை வீசிக் கலங்கினாள்.

நாலடியார் 126

சான்றோர் என மதித்துச் சேர்ந்தோரிடத்தில் அத்தன்மை இல்லையெனில் கவலைப்படாதே .. சந்தனம் இரு க்குமென்று திறந்த பெட்டியில் பாம்பு கண்டவன் கதையுமுண்டு இங்கு.

குறுந்தொகை 119 : சத்திநாதனார்

சிறிய மேல்வாயில் முளைத்த வாள் போலத் தோன்றும் கூரிய பற்களை உடையவளின் வளையல் அணிந்த கைகள், வெள்ளை நிற வரிகளையுடைய அடிக்கட்டுகள் கொண்ட  சிறுபாம்பைக் கண்டு பலம் பொருந்திய காட்டியானை அஞ்சுவதைப் போல என்னுள் அச்சமூட்டுகின்றன ...

நாலடியார் 71 :

பூமாலை போலக் கொட்டும் அருவியால் குளிரும் மலைகளை உடைய மன்னா ... முட்டாளோடு எதையும் சொல்லாதே . அவ்வாறு சொல்ல  நேர்ந்தால் முழுவதையும் சொல்லிவிடாதே. பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே சால நன்று.

நாலடியார் 17 :

தோட்டத்தில் பயன் தந்த மரங்களெல்லாம் பனிகாலத்தில் பழங்களை இழந்து பட்டுப்போவதைப் போன்றது இளமை. வேல் போன்ற கூரிய விழியாள் என்று நீ இவளை மிகவும் விரும்பினால் , ஒரு நாள் இவளும் கண் தெரியாமல் ஆகிச் சிறுகோலின் உதவியுடன் நடந்து செல்லும் கிழவியாகும் காலமும் வரும் . இளமையும் அழகும் நிலையற்றது  ...

குறுந்தொகை 157 : அள்ளூர் நன்முல்லையார்

குக்கூவென்று கோழி கூவியத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் துடித்தது என் நெஞ்சம். வாள்  போலத் தோன்றும் விடியல் ஒளிக்கீற்று வந்துவிட்டால் என் தோளோடு தோள் சேர்ந்திருக்கும் காதலனை என்னிடத்திலிருந்து பிரித்துவிடுமே .... எனவே ..

சிறப்புப் பாயிரம் : தொல்காப்பியம்

தராசின் இயல்பென்பது நிறுத்தும் வேளையில் அளவு குறையாமலும் நிறையாமலும் , ஐயத்தை நீக்கி நடுநிலைமையோடு இருத்தலும் எனக் கூறுவர் அதன் இயல்பறிந்தோர் .....

குறுந்தொகை 334 : இளம்பூதனார்

பனியில் உறைந்திருக்கும் பூக்கள் நிறைந்த நீர்நிலைகள் கடலோடு சேர்கின்ற நெய்தல் துறையின் தலைவனாகிய என் காதலன் என்னை விட்டு ப் பிரிந்து திரைகடலோடிச் சென்றால் என்னுயிரை இழப்பதன்றி வேறு என்ன செய்வது தோழி. சிறுவெள்ளைக் கடற்காக்கை தனது சிவந்த அலகால் முதுகின் மீது பற்றி வீசும் நீரானது வழிந்து அதன் இருபக்கமும் தான் நனைக்கும். அதைப் போலவே அவன் என்னை விட்டு நீங்கிச் சென்றால் வரும் துன்பமும் இருவருக்குமே தான்.